states

img

பிரதமர் மோடி திறந்து வைத்து 5 நாட்களே ஆன சாலை கனமழையால் சேதம்!  

உத்தரப்பிரதேசத்தில் 14 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்த 5 நாட்களே ஆன நிலையில் கனமழையால் சேதமடைந்துள்ளது.   

உத்தரப்பிரதேசத்தில் பந்தல்கண்ட் பகுதியில் அதிவிரைவு சாலை அமைப்பதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 14 ஆயிரத்து 850 கோடி ரூபாய் செலவில், 296 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த பந்தல்கண்ட் அதிவிரைவு சாலை சித்ரகூட், பந்தா, ஹமீர்பூர் மற்றும் ஜலான் உள்பட 7 மாவட்டங்கள் வழியாக செல்கிறது.

மேலும் இந்த சாலையின் வழியாக ஆக்ரா-லக்னோ அதிவிரைவு சாலை, யமுனா அதிவிரைவு சாலை வழியாக டெல்லிக்குச் செல்லவும் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. 28 மாதங்களில் நிறைவடைந்த இந்த அதிவிரைவு சாலையை கடந்த சனிக்கிழமை அன்று பிரதமர் திறந்து வைத்தார்.

இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழையால் விரைவு சாலையின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது.  இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடி அரசு திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விரைவு சாலை ஒருநாள் பெய்த கனமழையால் சேதமடைந்துள்ளதால் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

மேலும் இயந்திரங்கள் மூலம் சாலையை சரி செய்யும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.